திருவொற்றியூர்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரனை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மணலி, விமலாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் நாராயணன்(43). பாரிமுனையில் உள்ள லாஜிஸ்டிக் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மகள் பிறந்தநாளை கொண்டாட, கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு, பெங்களூருவில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.