திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சூடான பால் வழங்கப்பட்டது. “பட்சி தீர்த்தம்” என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் மலை மீது வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் உலக சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மாதந்தோறும் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தான் உகந்தது என்பதால் திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக் கணக்கில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலைச் சுற்றி வரும் பக்தர்கள் வழியில் சற்று இளைப்பாறும் வகையிலும், அசதியை போக்கும் வகையிலும் “திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நற்பணி மன்றம்” சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இலவசமாக சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நற்பணி மன்றம் சார்பில் மன்றத்தின் தலைவர் சுகுமாறன் தலைமையில் கிரிவலம் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு சூடான பால் வழங்கப்பட்டது. இதில் நற்பணி மன்ற செயலாளர் காஞ்சி கோவிந்தராஜ், துணைத் தலைவர் ரவிராஜ், பொருளாளர் ரவி, கமல், ஜனா, தினேஷ், ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.