அனல் பறக்கும் கர்நாடகா தேர்தல் களம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்..!

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். அங்கு ஆளும் பாஜ, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தென் மாநிலங்களில் பாஜ ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கருதி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி கர்நாடகத்தில் உள்ளார். அவர் இன்று தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியிடப்படுகிறது. இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும், தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகத்திற்கு வரவுள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை கர்நாடகா செல்லும் அவர்; தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரயங்கா காந்தி பேசுகிறார். அதனை தொடர்ந்து சாமராஜநகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…