ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி ஓசூர்- கோலார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், தமிழகத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரம் செல்லும் வாகனங்கள் பதிவு மற்றும் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனை சாவடியில் லஞ்சம் பெறுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி வடிவேல் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை முதல் சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சேண்டல் உப்ரேசியமேரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனைக்கு பின் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.