அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. மார்க்கெட் வளாகத்தை நவீனப்படுத்த தமிழக அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்பதால் கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து கூலி தொழிலாளர்கள் கூறுகையில், ‘’ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கேரளா உள்பட பல வெளிமாநிலங்களில் இருந்துவரும் கூலி தொழிலாளர்கள் வருகின்றனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். எங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அருகில் மருத்துவமனை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மருத்துவமனை கட்டப்படுகிறது. மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரவேண்டும்’ என்றனர்.