நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
இதய சிகிச்சை நிபுணரிடம் பரிசோதனைக்காக அனுமதி கேட்கப்பட்டதாகவும், அதன்படி நேற்று காலை அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், ரத்த நாள வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.