தேனிலவுக்கு இந்தோனேசியா சென்ற புதுமண டாக்டர் தம்பதி பலியானது எப்படி? உடலை கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமம் குறித்து உருக்கமான தகவல்

சென்னை: தேனிலவுக்கு இந்தோனேசியா சென்ற புதுமண டாக்டர் தம்பதி பலியானது குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்னியா டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த டாக்டரான லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் முடிந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 3ம் தேதி தேனிலவு கொண்டாட இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவிற்கு சென்றபோது நீரில் மூழ்கி இறந்தனர். தீவிர முயற்சிகளுக்கு பிறகு இரண்டு வாரம் கழித்து இருவது உடல்களும் இந்தோனேசியாவில் இருந்து சென்னைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது. இதில் விபூஷ்னியா உடல் நேற்று போரூர் மின் மயானத்தில் எரியூப்பட்டது. லோகேஸ்வரன் உடலை அவரது பெற்றோர் சேலத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் புதுமண தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்தது எப்படி? அவர்களது உடலை கொண்டு வருவதில் ஏற்பட்ட சவால்கள் குறித்து அவர்களது உறவினர் ஒருவர் உருக்கமாக கூறுகையில், ‘‘ஜூன் 1 ம் தேதி இருவருக்கும் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் தேன்நிலவு செல்வதற்காக விமானம் மூலம் கடந்த 3 தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றனர். பாலி தீவில் புதுமண தம்பதிகள் மட்டும் போட்டோ சூட் எடுப்பதற்காக செல்வது வழக்கம். இந்த நிலையில் அங்கு படகு மூலம் போட்டோ சூட் எடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு 150 புதுமண தம்பதிகளை அழைத்து செல்வார்களாம்.

ஏழாம் தேதி 150 ஜோடிகளில் லோகேஸ்வரனும், விபூஷ்னியும் சென்றுள்ளனர். கடலுக்கு நடுவே இருந்த பாறையின் இடையில் நின்று போட்டோ சூட் நடத்திய போது கடல் அலை வேகமாக இருவர் மீதும் அடித்ததில் இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் பதறி போய் கடலில் இழுத்து சென்ற இருவரையும் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது லோகேஸ்வரன் உடல் உடனடியாக கிடைத்தது. விபூஷ்னியா உடல் மட்டும் இரண்டு நாட்கள் கழித்து கிடைத்துள்ளது. இருவரும் இறந்து போன தகவல் ஏழாம் தேதி இரவு எங்களுக்கு தெரிய வந்தது. இந்நிலையில், இங்கிருந்து உறவினர்கள் மூன்று பேர் விமானம் மூலம் இந்தோனேசியா சென்று அங்கிருக்கும் போலீசாரிடம் நடந்தது குறித்து கேட்டு அறிந்தனர். பின்னர், அங்குள்ள நீதிமன்றத்தில் இது விபத்து தான் என்பதை உறுதி செய்த உத்தரவு பெற்று, பிறகு உடல்கள் அங்கிருந்து சென்னை எடுத்து வரப்பட்டுள்ளது ’’ என அவர் தெரிவித்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்