கோயிலின் ரங்க விலாச மண்டபத்தில் வைத்து புனித நீர் மேள தாளங்கள் முழங்க தாயார் சன்னதிக்கு எடுத்து செல்லப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அங்கு மூலவர்கள் தேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோரது திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு தூய்மை செய்து மெருகூட்டப்பட்டது. பின்னர் பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் தேவி, பூதேவி திருமேனிகளில் பூசப்பட்டது. நாளை தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும்.