Saturday, September 21, 2024
Home » ஆண்டுக்கு 2 முறை செலுத்தும் எச்ஐவி தடுப்பூசியால் 100 சதவீத பலன்: ஆய்வில் உறுதி

ஆண்டுக்கு 2 முறை செலுத்தும் எச்ஐவி தடுப்பூசியால் 100 சதவீத பலன்: ஆய்வில் உறுதி

by Suresh

கேப்டவுன்: தென் ஆப்ரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஆண்டுக்கு 2 முறை செலுத்தும் தடுப்பூசியால் எச்ஐவி தொற்று பரவல் தடுப்பதில் 100 சதவீதம் பலன் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் 13 லட்சம் பேர் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2010ம் ஆண்டை விட (20 லட்சம்) குறைவு என்றாலும், 2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய புதிய எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையை 5 லட்சத்திற்குள் கொண்டு வரும் இலக்கை எட்டும் சாத்தியமில்லை என்பதை காட்டி உள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் முடிவு கட்ட ஐநா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், எய்ட்ஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தற்போது எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆணுறை உள்ளிட்டவற்றுடன் சில மாத்திரைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த மாத்திரைகளை கட்டாயம் தினசரி உட்கொள்ள வேண்டும். ஒருநாள் தவறினாலும் கூட அந்த சமயத்தில் மேற்கொள்ளும் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றை தடுக்கும் லெனகபாவிர் தடுப்பூசியையும், நடைமுறையில் உள்ள 2 மாத்திரைகளையும் கொண்டு பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் உகாண்டாவில் மொத்தம் 28 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் 5,000 இளம்பெண்கள் பங்கேற்றனர். இவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, முதல் குழுவினருக்கு லெனகபாவிர் தடுப்பூசியும், 2வது குழுவினருக்கு வழக்கமான ட்ருவடா (எப்/டிடிஎப்) வாய்வழி மாத்திரையும், 3வது குழுவினருக்கு டெஸ்கோவி (எப்/டிஏஎப்) மாத்திரையும் வழங்கப்பட்டது.

ஓராண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் லெனகாபவிர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2,134 இளம்பெண்கள் யாருக்குமே எச்ஐவி தொற்று ஏற்படவில்லை. ட்ருவடா மாத்திரை சாப்பிட்ட 1,068 பெண்களில் 16 பேரும், டெஸ்கோவி மாத்திரை உட்கொண்ட 2,136 பேரில் 39 பேரும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், எய்ட்ஸ் பரவுவதை தடுப்பதில் தடுப்பூசி புதிய நம்பிக்கையை தந்துள்ளது. பற்றாக்குறையாலும், மருத்துவ வசதி இல்லாததாலும், ஊரடங்கு போன்ற சமயங்களிலும் தினசரி மாத்திரை உட்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பதை மாத்திரையை விட சுலபமான விஷயமாகும். எனவே அடுத்த 2 மாதத்திற்குள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இதனை விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் அதன் தரவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கக் கூடும்.

You may also like

Leave a Comment

three + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi