அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி,’ ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது’ என்றார். அதற்கு ராகுல்காந்தி ஆவேசமாக பதில் அளித்தார். இந்த விவாதம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்தை ராகுல் அவமதித்து விட்டார் என்று கூறி பா.ஜவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்னையில் ராகுல்காந்திக்கு ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ராகுல் காந்தியின் முழு உரையையும் நாங்கள் கவனமாகக் கேட்டோம். இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்துகிறார். ராகுல்காந்தியின் உரையின் ஒருபகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து பரப்புவது தவறானது. உண்மைகளை சிதைப்பவர்கள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ராகுல்காந்தி பேச்சின் ஒரு பகுதியை மட்டும் மக்கள் முன்வைப்பது தவறானது மற்றும் நெறிமுறையற்றது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.