சென்னை: இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் காலக்கெடு வழங்கியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் உதவி ஆணையர் (குரூப் 1-பி பணி) பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை முழுமையாக, குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக வருகிற 3ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகவல் அவ் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.