போபால்: இமாச்சல பிரதேசத்தில் மாயமான, முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்பட இயக்குனரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்லஜ் நதி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத், படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாவட்ட நிர்வாகம், இந்தோ தீபத்திய படை வீரர்கள், ராணுவ படை வீரர்கள் உள்ளிட்டோர் கடந்த 2 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 3 நாளாக வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்லஜ் நதி அருகே 3வது நாளாக தேடுதல் பணி நடைபெறுகிறது. தேடுதல் பணியின் போது வெற்றி துரைசாமி பயன்படுத்திய செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சைதை துரைசாமி, மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.