சென்னை: மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த 4 மாத காலத்திற்கு அவகாசத்தை நீட்டித்து நகர் ஊரமைப்பு இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மலைப்பகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு அக்.20ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவ.30ம் தேதி வரை கால அவகாச நீட்டிப்பு செய்யப்படுகிறது.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.