Monday, September 16, 2024
Home » நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் வெளியீடு

நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் வெளியீடு

by Neethimaan

சென்னை: நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குச் சாலை கட்டமைப்பு மற்றும் பாலங்கள் கட்டுமானம் மிகவும் அத்தியாவசியமானதாகும். சிறந்த தரம் மற்றும் இணைப்பு வசதியுடன் கூடிய சாலை கட்டமைப்பின் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் முன்னணிப் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் மொத்த சாலைகளின் நீளம் 2.71 லட்சம் கி.மீ. இதில் 67,216 கி.மீ. நீளச் சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலும், 6,805 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதர சாலைகள் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. சாலை கட்டமைப்பின் ஒரு பகுதியாக, 1,39,287 பாலங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலமாகக் கட்டப்பட்டுப் பராமரிப்பில் உள்ளன. மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியையும் மேம்படுத்த மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட பாதுகாப்பான சாலை கட்டமைப்புத் தேவைப்படுகிறது.

எனவே, தேவையான இடங்களில் முறையே ஆறுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள், இரயில்வே கடவுகளில் மேம்பாலங்கள்/ கீழ்பாலங்கள், பெருநகரம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சாலை மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட நீள் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் 1990, 1991 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் (சாலை பிரிவு) வெளியிடப்பட்டன. பாலங்களின் கட்டுமான முறையில் ஏற்பட்ட பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வடிவமைப்பில் பெற்ற அறிவுசார் அனுபவத்தால் வடிவமைப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இம்மாற்றங்களைப் பின்பற்றிப் பாலங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, இதனால் பாலங்களுக்கான கட்டுமான மதிப்பீடு குறைந்துள்ளது. புதிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வரைபடங்களுக்கான தேவையை உணர்ந்து, தற்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையால், நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள், 11 தொகுதிகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, அலகினால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றில், 10 தொகுதிகள் பல்வேறு வழித்தடங்கள் / சாலை அகலங்களுக்கான Reinforced Cement Concrete T-Beam and Slab superstructure வரைபடங்கள் ஆகும். ஒவ்வொரு தொகுதியிலும் 12 மீட்டர் முதல் 30 மீட்டர் வரையிலான, 16 வகை நீளமுள்ள பால மேற்தள வரைபடங்கள் உள்ளன. ஆக மொத்தம் தற்போது, 160 வகையிலான பால மேற்தளத்திற்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதி, 25 மீட்டர், 30 மீட்டர் மற்றும் 35 மீட்டர் நீளமுள்ள பல்வேறு வழித்தடங்களுக்கான Precast Prestressed Concrete Post Tensioned I-Girder and Reinforced Concrete slab type Composite Superstructure வரைபடங்கள் 9 வகைகளை உள்ளடக்கியது.

இத்தொகுப்புகளின் வெளியீட்டினால் பாலங்கள் கட்டுமானப் பணிகளில் -பாலங்களின் மேற்தளத்திற்கான ஒரு Ready – Reckoner ஆகவும், மேற்தளத்திற்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான நேரம் தவிர்க்கப்படும், மாநிலம் முழுவதும், பால மேற்தள பணியில் சீரான அளவிலான Shuttering உபயோகிக்கப்படும், பால கருத்துருக்கள் தயாரிப்பது எளிதாகும், ஒரே பாலப் பணியில், தேவைப்படும் இடங்களில், பல்வேறு நீளமுள்ள மேற்தளங்களை கட்டுவதற்கு ஏதுவாக அமையும், போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் கட்டுமானத்தை துரிதபடுத்த Precast Superstructure வரைபடங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் உட்கட்டுமானத்தை மேம்படுத்திட இதுபோன்ற தொழில்நுட்ப முயற்சிகளைத் தொடர்ந்து இந்த அரசு எடுத்துவருகிறது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் இரா.செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

nine − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi