பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி பலியானவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் எனக் கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு சுதந்திரமடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.

மனிதத்தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க இந்த சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த போதும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை ஒழிக்கப்படவில்லை. இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013ம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்க வேண்டும். பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். இந்த உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்து விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு