கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 17 மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டனர். மறுபுறம், காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதலை நிறுத்தும் வகையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளால் முன்வைக்கப்பட்ட 21 நாள் போர்நிறுத்த முன்மொழிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ஹிஸ்புல்லாவின் இலக்குகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதில் அர்த்தமில்லை. இந்த சந்தர்ப்பத்தில் லெபனானை முழு பலத்துடன் தாக்க ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களது இலக்கை அடையும் வரை இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படாது. ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவது மிகவும் முக்கியமானது’ என்றார்.