நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஹேமா கமிட்டி முழு அறிக்கை விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

திருவனந்தபுரம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கேரள அரசு கிடப்பில் போட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையை வெளியிட கேரள அரசுக்கு மாநில தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. புகார் கொடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ள தகவல்களை வெளியிடக்கூடாது என்றும், புகார் கொடுத்தவர்கள், புகார் சுமத்தப்பட்டவர்களின் பெயர், விவரங்களையும் வெளியிடக்கூடாது என்றும் தகவல் உரிமை ஆணையம் கூறியிருந்தது.

இதன்படி முழு அறிக்கையை கேரள அரசு வெளியிடவில்லை. இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் முழு அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது.அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த அறிக்கையை உடனடியாக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கையில் போக்சோ உள்பட பல கிரிமினல் வழக்குகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளதால் புகார் கொடுத்தவர்கள் விரும்பினால் வழக்கு உள்பட சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்துள்ளது. குழுவின் தலைவரான குற்றப் பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷிடம் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஐஜி ஸ்பர்ஜன் குமார், டிஐஜி அஜிதா பேகம் உள்பட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். முதல் கட்டமாக இவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த சிறப்பு விசாரணைக் குழு தீர்மானிக்கும். புகார் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அவர்கள் விரும்பினால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். முக்கிய நடிகர்கள் உள்பட யார் யார் இந்த வழக்குகளில் சிக்கப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி