சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உதகை தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளி அங்கம்மாள் மரணமடைந்துள்ள செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. அங்கம்மாள் போல் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களும், அரசின் தோட்டக்கலைத்துறையிலும், ஆராய்ச்சி பண்ணைகளிலும், தினக்கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தில் அரசு தலையிட்டு பேசித் தீர்வுகண்டிருந்தால். மூத்த தொழிலாளியின் சாவு தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போராட்டத்தில் அரசின் அணுகுமுறை தொழிலாளர்களிடம் எதிர்மறை கருத்துக்களை உருவாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதகையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதுடன், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.