திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வராணி(40). இவர் 4 நாட்களுக்கு முன்பு டூவீலரில் சென்றார். அப்போது போலீஸ் சீருடையில் ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றார். இதை பார்த்த அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவர், இந்த காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தொடர்ந்து அவர் பெண் போலீசை முந்தி சென்று ஏன் போக்குவரத்து விதிமுறையை பின்பற்றவில்லை என்று கேள்வி கேட்டார்.
அதற்கு செல்வராணி அலட்சியமாக பதில் அளித்துவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய போலீசாரே விதியை மீறி ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செல்வராணிக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவரிடம் விளக்கம் கேட்டு எழுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.