இந்நிலையில் தற்போது விமான நிலைய இயக்குனரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சேவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையில் மாமல்லபுரம் வரை பறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக கோவளத்தில் இருந்து முட்டுக்காடு படகுத்துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை ஆகியவற்றைச் சுற்றி மீண்டும் கோவளத்திற்கு வந்து இறங்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நேற்று முன்தினம் இதற்கான முதற்கட்ட பயணம் தொடங்கியது.
ஆன்லைன் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆர்வமுள்ள பயணிகள் அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்தனர். அவர்கள் காலை 11 மணியில் இருந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒரு பயணிக்கு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிமிடம் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே சுமார் 20 நடைகள் ஹெலிகாப்டர் பயணம் இயக்கப்பட்டது. இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ஏராளமானோர் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடிப்பார்கள் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும் என தனியார் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.