பூந்தமல்லி: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தினால் மதுரவாயல் தொகுதியில் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். இதையடுத்து மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 11வது மண்டலம், 150வது வார்டு, போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னி நகர், கம்பர் சாலையில் மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி ஏற்பாட்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் கைலாசம், ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வானகரம் உயர்நிலைப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், ரூ.69.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடத்தை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் துரைவீரமணி, ஒன்றிய குழு தலைவர் கிரிஜா, வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஞானபிரகாசம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.