உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து 35கிமீ தூரத்தில் இமயமலையின் மேல்புறத்தில் 4,100 – 4,400 மீட்டர் உயரத்தில் சஹஸ்த்ர தால் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த மே 29ம் தேதி 22 பேர் அடங்கிய மலையேற்ற குழுவினர் சஹஸ்த்ரா தாலுக்கு மலையேற்றத்துக்காக சென்றனர். இதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 20 பேரும் இடம்பெற்றிருந்தனர். சஹஸ்த்ர தால் மலையில் மலையேற்ற குழுவினர் ஏறிக் கொண்டிருந்தபோது கடும் பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாக ஏறவும், இறங்கவும் முடியாமல் சிக்கி கொண்டனர்.
இந்நிலையில் மோசமான வானிலையில் சிக்கி மலையேற்ற குழுவில் இருந்த பெண் உள்பட 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்(53), பத்மநாதா குந்தாபூர் கிருஷ்ணமூர்த்தி(50), அனிதா ரங்கப்பா(60) மற்றும் பத்மினி ஹெக்டே(34) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.