பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது வீடுகளில் பராமரிக்க முடியாமல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதித்தவர்களை விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் பக்தர்கள் வழங்கும் உணவுகளை உண்டு சாலையோரங்களில் படுத்து உறங்குகின்றனர். தற்போது பழநி நகராட்சி சார்பில் ஆதரவற்றோர் பராமரிப்பு மையம் பழநியில் செயல்பட்டு வருகிறது. ஆனால், பலர் அங்கு தங்குவதில்லை.
இந்தநிலையில் பழநி பகுதியில் தற்போது கடும் பனி நிலவி வருகிறது. காலை 10 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்நிலையில் நேற்று பனியின் காரணமாக பழநி பஸ்நிலையத்தின் பிளாட்பாரங்களில் படுத்திருந்த 2 முதியவர்கள், புதிய பஸ்நிலையத்தின் விரிவாக்க பகுதியில் படுத்திருந்த 2 முதியவர்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலையோரங்களில் படுத்துறங்கும் முதியவர்களை மீட்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.