தென்கனரா: தென்கனரா மாவட்டத்தில் இயற்கை பேரிடர் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது. மங்களூரு மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தாலுகா மையங்களிலும் இயற்கை பேரிடர்களை சமாளிக்க மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் தாலுகா மையங்களில் பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பொதுமக்களின் புகார்களுக்கு எப்போதும் தயாராகவும், பதில் அளிக்கவும் வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். தாலுகா அளவிலான அதிகாரிகள் மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். சுற்றுலா பயணிகள் நதி அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டாம். சிறுவர்களை தாழ்வான பகுதிகள், ஏரிகள், ஆறுகள் அல்லது கடல் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.