திருமலை : ஆந்திராவில் கனமழையால் சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்க மின் ஊழியர்கள் ஓடையை கயிறு கட்டி கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாரேடுமில்லி, ராம்பசோடவரம் கோட்டத்தில் உள்ள சுன்னம்பாடு மற்றும் தேவாரப்பள்ளி கிராமங்களுக்கு மரேடுமில்லி வனப்பகுதியில் இருந்து செல்லும் மின் கம்பியில் மூங்கில் மரங்கள் விழுந்ததால் சேதமாகி மின்தடை ஏற்பட்டது. இதனால் சுன்னம்பாடு, தேவாரப்பள்ளி கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன்காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மின்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மின் ஊழியகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வந்த போது கனமழையால் அங்குள்ள ஓடையில் நீர் ஆர்ப்பரித்து சென்றது. அதனை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் ஓடையின் இருபக்கமும் கயிறு கட்டி உயிரை பணயம் வைத்து ஓடையை கடந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. துணிச்சலுடன் செயல்பட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மின்துறை உழியர்கள் அதிகாரிகள் பாராட்டினர்.