இமாச்சல்: கனமழை காரணமாக இமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகர்-மணாலி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் சில தினங்களாக கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சண்டிகர்-மனாலி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பயணிகள் மண்டியில் உள்ள ஆட் அருகே சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலையில் 7 மைல் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு பாதிப்பை சீர்செய்யும் விதமாக சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாறைகளை வெடிக்கச் செய்ய வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏழு-எட்டு மணி நேரத்தில் போக்குவரத்துக்கு சரி செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிக அளவில் உள்ளதால் மலைகளை ஒட்டியுள்ள சாலைகளை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.