தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் தாமதமாக வருவதாலும், விமானத்தில் ஏற்றப்படும் பயணிகளின் உடமைகள், விமானங்களில் பயணிகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களை, விமானங்களில் ஏற்றுவது போன்ற செயல்பாடுகளால் காலதாமதம் ஆவதாலும், மேலும் சில விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமானப் பணியாளர்கள், மழை காரணமாக தாமதமாக வருவதாலும், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், இலங்கை, குவைத், பிராங்பார்ட், பக்ரைன், துபாய், சார்ஜா, தோகா, அடிஷ் அபாபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் ஆகிய 12 சர்வதேச விமானங்கள், மற்றும் திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 22க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே நேற்று அதிகாலை 5:45 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், காலை 9:15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது