மீனம்பாக்கம்: டெல்லியில் சில நாட்களாக வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட பல்வேறு நகர சாலைகளில் மழைநீர் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே, நேற்று புதுடெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியாகினார். சிலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் பல்வேறு விமான சேவைகள் நேற்று மதியம் முதல் இன்று மாலை வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுடெல்லிக்கு புறப்படும் 7 விமானங்கள், புதுடெல்லியில் இருந்து வரும் 9 விமானங்கள் என மொத்தம் 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 16 விமான சேவைகள் ரத்து குறித்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.