உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் உணவகங்களில் ஹூக்கா பாருக்கு தடை: விதிகளை மீறினால் 3 ஆண்டு சிறை; தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: உடல் நலனுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஹூக்கா பார் வைக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹூக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை.

எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு உணவகங்களில் ஹூக்கா பாருக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. தற்போது அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது: புகைக்குழல் கூடத்தினை தடை செய்தல் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபர் எவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது. “உணவுக்கூடம்” என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச் சாராயம் அல்லது பிற தானிய வகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் என்று பொருள்படும்.

மாநில அரசினால் அதிகாரம் அளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்கு குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4Aம் பிரிவின் அந்த வகை முறைகளானவை மீறப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம். புகைக்குழல் கூடத்தினை வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும். ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனையும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை நீட்டிக்கப்படலாம். அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி