தலை மற்றும் கழுத்து புற்றுநோய்

நன்றி குங்குமம் டாக்டர்

வளரும் நாடுகளில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்துவரும் புற்றுநோய்களில் தலை மற்றும் கழுத்து புற்றுநோயும் (HNC) குறிப்பிடதக்கதாக இருக்கிறது. புற்றுநோய் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 2017 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி, இது ஆறாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோயை பொருத்துவரை, பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் பொதுவான வகைகள், அறிகுறிகள், நோயறிதல் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மற்றும் ஸ்கல் பேஸ் சர்ஜனான மருத்துவர் சி.ராயப்பன்தலை மற்றும் கழுத்து புற்றுநோயானது ஹைப்போபார்னக்ஸ், ஓரோபார்னக்ஸ், உதடு, வாய்வழி குழி, நாசோபார்னக்ஸ் அல்லது குரல்வளையில் உருவாகும் பல்வேறு கட்டிகளை உள்ளடக்கியது. தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களில் சில முக்கிய வகைகள் உள்ளன, அவை பாதிக்கும் இடத்தைப் பொருத்து பெயரிடப்பட்டுள்ளன. தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதற்கு இதுவே காரணம்.

உதாரணமாக, வாய் புற்றுநோய்: இது உதடுகள், நாக்கு, ஈறுகள், கன்னங்கள் மற்றும் வாயின் உட்புறத்தை பாதிக்கும் புற்றுநோய் வகை. வாய்வழி புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் வாயில் சிவப்பு/வெள்ளை திட்டுகள், தாடையில் வீக்கம், ரத்தப்போக்கு மற்றும் வாயில் வலி ஆகியவை ஏற்படும்.தொண்டை புற்றுநோய்: குரல்வளை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது, இந்த வகை புற்றுநோயானது குரல்வளையை பாதிக்கிறது. இது மூக்கில் இருந்து உருவாகி உணவுக்குழாயுடன் இணைக்கிறது. இதில் டான்சில்ஸ், நாக்கின் பின்புறம் மற்றும் வாயில் மென்மையான அண்ணம் ஆகியவை அடங்கும். தொண்டை புற்றுநோயானது விழுங்கும்போது வலி, கழுத்து அல்லது தொண்டை வலி, காதுவலி, கேட்பதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காட்டலாம்.

மேலும், குரல்வளை புற்றுநோய் குரல் பெட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது குரல் நாண்கள் மற்றும் எபிக்ளோடிஸ் (தொண்டையின் பின்புறத்தில் தொங்கும் ஒரு அமைப்பு) அமைப்பு ஆகும்.
நாசி குழி புற்றுநோய்: இதுவும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும். இதில் நாசி குழி, மூக்கின் உள்ளே உள்ள இடம் பாதிக்கப்படுகிறது. இது மூக்கைச் சுற்றியுள்ள எலும்புகளுக்குள் இருக்கும் பாராநேசல் சைனஸையும் பாதிக்கிறது. கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் தலைவலி, மூக்கிலிருந்து ரத்தப்போக்கு, பல்வலி, தடுக்கப்பட்ட சைனஸ்கள், நாள்பட்ட சைனஸ் தொற்றுகள் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஆகியவை அடங்கும்.

உமிழ்நீர் சுரப்பி புற்றுநோய்: உமிழ்நீர் சுரப்பிகள், உமிழ்நீரை உற்பத்தி செய்யும் சுரப்பிகள், வாயின் தரையிலும் தாடை எலும்பின் அருகிலும் உள்ளன. உமிழ்நீர் சுரப்பிகளின் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளில் கன்னம் அல்லது தாடையின் கீழ் வீக்கம் ஏற்படுவது, முகம் மற்றும் கன்னத்தில் வலி ஏற்படுவது மற்றும் முக தசைகளின் உணர்வின்மை ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வகை புற்றுநோய்க்கும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தாலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகள் என்றால்

வாய் வலி
வாய்வழி குழியில் புண்
எச்சில் / சளியில் ரத்தம் வருதல்
வாய் திறப்பதில் சிரமம்
கழுத்தில் உள்ள முனைகளின் விரிவாக்கம்
விழுங்குவதில் சிரமம்
வலியுடன் விழுங்குதல்
சுவாசிப்பதில் சிரமம்
குரல் கரகரப்பு
குரல் மாற்றம்
எடை இழப்பு போன்றவைகளாகும்.

இந்தியாவை பொருத்தவரை 25-30 சதவிகிதம் பேர் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோய் ஏற்பட முக்கியகாரணம், புகையிலை பயன்படுத்துவது, பான்மசாலா பயன்படுத்துவது, புகைப்பிடிப்பது, பாக்கு போடுவதுதான். இதைத்தவிர மரவேலை செய்பவர்கள், கெமிக்கல் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் போன்றோருக்கும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, மர வேலையில் ஈடுபடுபவர்கள், அதிகளவில் மரத்துகள்களை சுவாசிக்க நேரிடுவதால், மரத்துகள்கள் மூக்கின் உள் பகுதியில் சென்று படிந்து புற்றுநோயாக மாற வாயப்புகள் உள்ளது. அதுபோன்று கெமிக்கல் நிறுவனங்களின் பணிபுரிபவர்களுக்கும் கெமிக்கல்களின் நெடிகளை சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நோய் கண்டறிதல்

மேலே சொன்ன அறிகுறிகளுடன் வந்தால், அவர்களின் அறிகுறிகளுக்கு ஏற்ப பரிசோதனைகள் செய்யப்படும். அதில் முக்கியமாக, என்டோஸ்கோபி சோதனை செய்து கட்டி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, பின்னர் அங்கிருந்து சிறிதளவு சதையை எடுத்து பயாப்ஸி செய்யப்படும். அதன்மூலம், என்ன வகை கட்டி,புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிவோம்.

கட்டி உறுதியான பிறகு, சிடி ஸ்கேன் மூலம், கட்டி எவ்வளவு அளவில் இருக்கிறது. எங்கே எல்லாம் பரவி இருக்கிறது, எந்த நிலையில் இருக்கிறது, மற்ற உறுப்புகளை பாதித்திருக்கிறதா போன்றவற்றை அறிவோம்.

தற்போது, நவீன தொழில் நுட்பத்தில்

உருவான பெட் ஸ்கேன் முறையை பயன்படுத்துகிறோம். இது, கட்டி என்ன நிலையில் இருக்கிறது. எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை தெளிவாக காண்பித்துவிடும். அதைக்கொண்டு, தகுந்த சிகிச்சைகளை அளிக்கிறோம்.

சிகிச்சை முறைகள்:

புற்றுநோயை பொருத்தவரை மூன்றுவிதமான சிகிச்சை முறைகள் இருக்கிறது. முதல்வகை அறுவை சிகிச்சை அடுத்தது ரேடியோ தெரபி மூன்றாவது கீமோ தெரபி.தலை மற்றும் கழுத்து புற்றுநோயை பொருத்தவரை அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபிதான் பிரதானம். இதிலேயே, பெரும்பாலும் குணமாகிவிடும். கீமோ தெரபி என்பது துணை சிகிச்சை முறைதான். அதை தனியாக தருவதில்லை. மற்றபடி, பெரும்பாலும், அறுவை சிகிச்சையைதான் பரிந்துரைப்போம்.

முன்பெல்லாம், குரல்வளையில் புற்றுநோய் ஏற்பட்டால், குரல்வளையை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், தற்போது அப்படியில்லை, குரல்வளையிலோ, உணவுக் குழலிலோ புற்றுநோய் இருந்தால், ரேடியோ தெரபியுடன் சேர்த்து கீமோ தெரபி சிகிச்சையையும் அளித்து அதன் மூலமே சரி செய்ய பார்ப்போம். முடியாதபட்சத்தில், அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவோம். குரல்வளையை பொருத்தவரை முன்பெல்லாம். அறுவை சிகிச்சைக்குப் பின், பேசுவதற்கும், விழுங்குவதற்கும் சிரமம் அதிகம் இருக்கும்.

மேலும், முகமும் பார்ப்பதற்கு சற்று விகாரமான தோற்றத்தில் மாறிவிடும். ஆனால், தற்போது அப்படியில்லை. நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டனது. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பழையநிலையை உருவாக்கிவிட முடியும். உதாரணமாக, தாடை எலும்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்றால், காலில் இருந்து சிறிதளவு எலும்பை எடுத்து வைத்து அறுவைசிகிச்சை செய்து அதே வடிவத்தில் கொண்டு வந்துவிடுவோம். இதன்மூலம் தோற்றத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது. மூக்குப் பகுதியிலும் இதே முறையைத்தான் பயன்படுத்துகிறோம்.

குரல்வளையை பொருத்தவரை, முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே குரல்வளையை அகற்றுவோம். மற்றபடி நவீன சிகிச்சை முறையில் மூச்சுக் குழாய்க்கும், உணவுக் குழாய்க்கும் இடையில் ஒரு வால்வு பொருத்திவிடுவோம். இதன்மூலம், அவரால் நன்கு பேசமுடியும். அதுபோன்று தற்போது ரோபாடிக் சர்ஜரி எல்லாம் வந்துவிட்டது. இந்த சர்ஜரியில் ரோபாட் தனித்து இயங்காது. மருத்துவர்கள் ஆணைக்கு இணங்க அது செயல்படும். இதில் என்ன நன்மை என்றால், தொண்டையில் ஏற்படும் ஆரம்பநிலை புற்றுநோய்க்கு முன்பெல்லாம் தாடையை திறந்துதான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், இந்த ரோபாடிக் சிகிச்சைமுறையில் வாய்வழியாகவே, கட்டிகளை அகற்றிவிட முடியும். இதனால், நோயாளிக்கு பெரியளவில் பாதிப்புகள் இருக்காது. அவர் விரைவிலேயே குணமாகி வீடு திரும்பிவிட முடியும்.

மற்றுமொரு நவீன சிகிச்சைமுறை ஸ்கல் பேஸ் சர்ஜரி. இது மண்டையோட்டின் அடிப்பகுதி சைனஸ், கண், காது போன்றவற்றை ஓட்டியிருக்கும். இந்தப் பகுதிகளில் வரும் கட்டிகள் அந்த எலும்பை அரித்துக் கொண்டு தலைக்குள் சென்றுவிடும். அதற்கு ஓபன் சர்ஜரிதான் கடந்த 30 ஆண்டுகளாக செய்யப்படுகிறது. ஆனால், தற்போது, என்டோஸ்கோபி ஸ்கல் பேஸ் சர்ஜரி மூலம், மண்டைஓட்டை தொடாமலே, மூக்குவழியாக போய், கட்டிகளை அகற்றிவிட்டு மண்டைஓட்டின் அடிப்பகுதியையும் சீரமைக்க முடியும். இது ஆரம்பநிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிகிச்சைமுறைகளின்போது. காது மூக்கு தொண்டை நிபுணர், நரம்பியல் நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜன் என எல்லோருமே சேர்ந்து ஒரு டீமாக இருந்துதான் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம்.

தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:

இந்த தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை பொருத்தவரை, பெரும்பாலும் நாமே உருவாக்கிக் கொள்ளும் புற்றுநோய்தான். எனவே, புகைபிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது, பான் மசாலா எடுத்துக் கொள்வது போன்றவற்றை நிறுத்தினாலே பெரும்பாலும் இந்த புற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

ரத்தத்தை விருத்தி செய்யும் வாழைக்காய்!

PMDD பிரச்னைக்கு தீர்வளிக்கும் அரோமா தெரபி!

நோய் தீர்க்கும் ஆசனங்கள்