சென்னை: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு நியாயமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியது.
இந்நிலையில், ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு நியாயமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். குஜராத் உயர்நீதிமன்றம் தரத் தவறிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
2 ஆண்டு சிறை தண்டனை என்ற உச்சபட்ச தீர்ப்பை இதுவரை எந்த நீதிமன்றமும் தந்ததாக தெரியவில்லை 2 ஆண்டு சிறை தண்டனை என்பது மிக மிக தவறானது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, உச்சநீதிமன்றத்துக்கு தலைவணங்கி நன்றி கூறுகிறோம். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த அதே வேகத்தில் தற்போது செயல்படுவதுதான் சான்றாண்மைக்கு அழகு என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ரவிக்குமார் எம்.பியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு பதவி வழங்குவதிலும் தீவிரம் காட்டுக: ரவிக்குமார் எம்.பி
பதவியை பறிக்க தீவிரமாக நாடாளுமன்றம் செயல்பட்டதுபோல் தற்போது பதவியை மீண்டும் வழங்க தீவிரம் காட்ட வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றத்திலேயே தடை விதித்திருக்க வேண்டும். ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருவதன் மூலம் பிரதமரை அவைக்கு வரவழைக்க முடியும் என நம்புகிறேன். தற்போது உச்சநீதிமன்றம் தனது கடமையை சரியாக செய்திருக்கிறது, எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவார் என்பது மகிழ்ச்சியான செய்தி என ரவிக்குமார் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.