இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன்? மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகையை பெருமை மிகு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரேஷன் கடைகளில் ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது ஏழை, எளிய குடும்பங்களின் மனதில் பால் வார்த்துள்ளது. அதேநேரத்தில் அரசியல் ஆதாயம் தேடமுயன்றவர்களுக்கு சவுக்கடியாகவும் மாறியுள்ளது. நடப்பாண்டில் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாகும் முன்னரே சென்னையை உலுக்கிய புயலின் கோரமும், இதற்கடுத்த ஓரிரு நாளில் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையும் எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் கண்கூடாக கண்ட ஒன்று. அப்போது முதல்வரின் சீரிய நடவடிக்கைகளால் மின்னல் வேகத்தில் சுழன்றது அரசு இயந்திரம்.
தமிழ் மக்களின் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தொகை ஒதுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தார் நமது முதல்வர். ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை தருவதற்கு பதிலாக ஏளனம் மிகுந்த பதில்களே அதிகளவில் உலா வந்தன. ஆனாலும் தமிழ்நிலத்தின் தலைநகரில் கடும் புயலால் பாதித்த மக்களுக்கும், பெரும் மழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை வாரி வழங்கினார் முதல்வர். கவலை தோய்ந்த நேரத்தில் நீண்ட அரசின் கருணைகரங்கள், இப்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கும் கைகளில் ரூபாய் ஆயிரத்ைத வழங்கியுள்ளது. பெரும் நிதிச்சுமையிலும் மக்கள் மகிழ்வே பிரதானம் என்ற முதல்வரின் எண்ண ஓட்டத்திற்கு இது மேலும் ஒரு சான்றாக நிற்கிறது.