புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடினார். 2001 முதல் 2014ம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக இருந்த அவர், 2014ல் பிரதமராக பொறுப்பேற்றார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து 3வது முறையாக பிரதமரமாக பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘‘தேசமே முதலில் என்கிற உணர்வோடு உழைக்கும் உங்களின் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என கூறி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி.
நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து தெரிவிக்கிறேன்’’ என கூறி உள்ளார். மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உபி முதல்வர் யோகி ஆதித்யாந்த் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும், உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.