தாக்கா : தீவிர புயலான ஹாமூன் புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை வங்கதேச கடற்கரையை கடந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயலானது, நேற்று மிக தீவிர புயலாக மாறியது, இது வலுவிழந்து வங்கதேசத்தின் சிட்டகாங்கிற்கு தெற்கே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த போது 95 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வலுவிழந்த புயலானது, அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் இந்தப் புயல் காரணமாக மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரை பகுதிகளில் மணிக்கு 70 கிமீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.