ஹமாஸ் இயக்க துணைத்தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஹெப்ரான் நகரில் பாலஸ்தீனர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

காசா: லெபனானில் டிரோன் தாக்குதலில் ஹமாஸ் இயக்க துணைத்தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்புல்லா இயக்கத்தின் தளமாக இயங்கும் தகியே புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் அரூரி பலியானார். அப்போது அப்பகுதியில் கட்டடங்கள், வாகனங்களும் உருக்குலைந்தன. அரூரியின் தாயார் ஆயிஷா 15 ஆண்டு சிறையில் இருந்து தனது மகன் விடுதலையான பிறகு திருமணம் செய்து 3 மாதங்களிலேயே பாதுகாப்புக்காக வேறு நாட்டுக்கு அனுப்பியதாக தெரிவித்தார். இப்போது ஒரு மாவீரனாக தனது மகனை உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

அரூரி உடன் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்க உறுப்பினரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனிடையே அரூரியை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்ததாக கூறி மேற்கு கரை ஹெப்ரான் நகரில் பாலத்தீனியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரமலா நகரிலும் ஏராளமானோர் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரஃபா நகரில் உள்ள இடப்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கான முகாமில் தங்கி உள்ளவர்கள் ஒரு அரோரி இறந்தால் பத்து லட்சம் அரோரிகள் தோன்றுவார்கள் என்று கூறினர்.

இந்த இழப்பால் தங்களது தலைவர்கள் மேலும் தீவிரமாக போராடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கான் யூனிஸ் நகரில் பலஸ்தீன செம்பிறை சங்க கட்டடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய போது மக்கள் தப்பியோடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், காசா பகுதியில் செம்பிறை சங்க அடையாளத்துடன் உள்ள அல் அமால் மருத்துவமனை கட்டடம் மீது நடந்த தாக்குதலில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேர் பலியானதாக ஐ.நா. மனிதநேய உதவி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரை அப்புறப்படுத்துவதற்காகதாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’