2025ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பம் தொடங்கியதாக அறிவிப்பு

சென்னை: ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2025–ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.8.2024 முதல் 9.9.2024 முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் 2025–ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 15–1–2026 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் 2025–ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 9.9.2024 ஆகும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு