Saturday, July 6, 2024
Home » ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு: மாநிலங்களவையில் இரங்கல்

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு: மாநிலங்களவையில் இரங்கல்

by Lavanya

ஹத்ராஸ்: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. சாமியாரின் காலடி மண்ணை எடுக்க முயன்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. பலியான 121 பேரில் 108 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த போலே பாபா என்ற சாமியாரை, உத்தரபிரதேசம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த பலர் பின்பற்றி வருகின்றனர். இவர் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார்.

மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல் போடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் உத்தரபிரதேசம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்த சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை. அனல் காற்று வீசியதால் மக்கள் அமரும் இடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. மேலும் அந்த இடம் வயல்பகுதி என்பதால் சேறும் சகதியுமாக இருந்தது. மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. சாமியார் போலே பாபாவிடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர்.

அதற்கு முன்னதாக கூட்டத்தில் சாமியார் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மக்களில் சிலர் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களை பார்க்காமல் பலரும் அவர்கள் மீது ஏறி ஓடியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 90 பெண்கள் உட்பட 116 பேர் பலியாகினர். கூட்டம் நடந்த பகுதியே சில நிமிடங்களில் சுடுகாடாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் உள்ளிட்டோர் அடங்குவர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகவும் உள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் சடலங்கள் ஹத்ராஸ் மாவட்ட அரசு மருத்துவமனை, அலிகர் அரசு மருத்துவமனை, இடா மருத்துவமனையில் வைக்கப்பட்டன. அவை சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் நேற்று மாலை முதல் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த கோர சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் 3 அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஹத்ராஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உயிரிழப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஹத்ராஸ் விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் திவேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

மெயின்புரி மாவட்டத்தில் சாமியாருக்கு சொந்தமான ராம் குதிர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் சாமியார் போலே பாபாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இன்று காலை அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் தடயவியல் குழுவும், மோப்ப நாய் பிரிவும் தடயங்களை சேகரித்தன. ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்ந்து சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியானது ஆக்ராவில் நாளை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்துவந்த நிலையில், தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக, சாகித், ஜெய்தாரா, மர்ஹாரா, நிதவுலி கலன், அவகர் போன்ற இடங்களில் ஹத்ராஸ், ஷாஜஹான்பூர், மையின்புரி மாவட்ட மருத்துமனைக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் மக்களின் உடமைகள் சிதறிக் கிடக்கின்றன. ஆடைகள், திருமண அட்டைகள், ஆதார் அட்டைகள், டிபன் பாக்ஸ்கள், பைகள், காலணிகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi