Saturday, June 29, 2024
Home » குட்கா முறைகேடு வழக்கில் 11வது முறையாக வாய்தா வாங்கிய சிபிஐ: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ரவியின் அனுமதி கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்

குட்கா முறைகேடு வழக்கில் 11வது முறையாக வாய்தா வாங்கிய சிபிஐ: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ரவியின் அனுமதி கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்

by Karthik Yash

சென்னை: லஞ்சம் பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழ்நாட்டில் விற்க அனுமதித்த குற்றச்சாட்டில் பதிவான வழக்கு விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என்று சிபிஐ 11வது முறையாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குட்கா விற்பனை, குடோனில் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுகிறது என்று கிடைத்த தகவலின் படி, கடந்த 2016ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்த குட்கா பொருள்கள் கடைகளுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதிய ஒரு டைரி சிக்கியது. இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல்கள் இருந்தன. அந்த சர்ச்சையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்முருகன் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த சிபிஐ கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், ஒன்றிய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களையும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கின் அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதா என்று சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு, சிபிஐ தரப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் நேற்றைய விசாரணை வரை 11 முறை (டிசம்பர் 15, ஜனவரி 10, பிப்ரவரி 6,17, மார்ச் 20, ஏப்ரல் 18, 25 மே 11 ஜூன் 3, 26) வழக்கு விசாரணையை சிபிஐ தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

16 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi