பெரம்பூர்: சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில், மளிகை கடையில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, புளியந்தோப்பு சரவண பெருமாள் தெரு பகுதியில் போலீசார் நேற்று தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் இருந்து ரூ.2,000 மதிப்புள்ள 800 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடையை நடத்தி வந்த மாலதி (43) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பா (61) மற்றும் பட்டாளம் பகுதியைச் சேர்ந்த கந்தன் (42) மற்றும் தேவராஜ் (47) ஆகியோர் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து புளியந்தோப்பு மற்றும் புரசைவாக்கம் பகுதியில் விற்று வந்துள்ளனர். பிறகு 4 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான புஷ்பா மீது ஏற்கனவே 20 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.