10 டன் குட்கா பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சிக்னல் அருகே பூந்தமல்லி போலீசார் கடந்த மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10டன் குட்கா மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷ்(27), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை பூந்தமல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த செந்தில் (எ) கனகலிங்கம்(38), என்பவரை தனிப்படை போலீசார் நேற்று பூந்தமல்லியில் கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை நீண்ட காலமாக பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி லாரி போன்ற சரக்கு வாகனங்களில் எடுத்து வந்து சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இவர் யாருக்கெல்லாம் குட்கா விற்பனை செய்து வந்தார். இவருக்கு பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கணகலிங்கத்தை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்