Saturday, June 29, 2024
Home » குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை; 2 பேருக்கு எதிராக தாக்கல் செய்ய அனுமதி வரவில்லை: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை; 2 பேருக்கு எதிராக தாக்கல் செய்ய அனுமதி வரவில்லை: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

by Neethimaan

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் இன்னும் 2 பேருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கிடைக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு திரும்ப அளித்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசு அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன்காரணமாக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்த கடிதத்தை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் 2 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குட்கா முறைகேடு வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தம் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi