சென்னை: சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்து சென்றது தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக ஆட்சியின் போது திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றனர். குட்கா எடுத்து சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்புரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவில் ஒ.பன்னீர்செல்வம் அணியினர் உருவாகி, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியதை சுட்டிக்காட்டி ஆட்சி கவிழ்ந்துவிடபோக்கும் என்ற காரணத்தினால் இந்த உரிமை மீறல் நோட்டிஸை திமுகவினர் தரப்பியுள்ளதாக வாதிட்டார்.
தொடர்ந்து அரசியலமைப்பு சட்டப்படி பதவிகாலம் முடிந்ததும் சட்டமன்றம் கலைந்து விடுகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் உரிமை மீறல் நடவடிக்கைகள் அனைத்தும் அரசு முடிந்தவுடன் காலாவதியாகிவிடுகின்ற என்ற பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி திமுக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும் தற்போதுள்ள சட்டமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியாது எனவும், இந்த உரிமை மீறல் நோட்டீஸ் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, இவை அனைத்தும் சபாநாகரின் அதிகாரதிற்குட்பட்டது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் மசோதாக்கள் காலாவதியாகலாம், ஆனால் உரிமை மீறல்கள் எவ்வாறு காலாவதியாகும் என கேள்வியெழுப்பினர். இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.