சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் அக்.14-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரை டெல்லி சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், ஒன்றிய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், சுகாதரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஏற்கனவே உள்ள 6 பேருடன் கூடுதலாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் பெயர்களை இணைத்து சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்ககர், சென்னை காவல்துறை முன்னாள் காவல் ஆணையாளர் ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கேராஜேந்திரன், வணிகவரித்துறை இணை ஆணையராக பதவிவகித்த வி.எஸ்.குறிஞ்சி செல்வன் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கு எம்.பி.எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது குற்றப்பத்திரிக்கை நகல் தயாரகவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையானது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை தாக்கல் செய்தார். சுமார் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையுடன் ஆவணங்களை சேர்த்து 20,000 பக்கங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஆவணங்கள் அடங்கிய பென்டிரைவ் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணையை அக்.14-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அக்.14-ம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.