Tuesday, September 17, 2024
Home » குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்! ஒரே நாளில் 356 திருமணங்கள்..

குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்! ஒரே நாளில் 356 திருமணங்கள்..

by MuthuKumar

திருவனந்தபுரம்: கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் தினமும் வருகின்றனர். முகூர்த்த நாட்களில் இக்கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாகும். பெரும்பாலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் அதிக திருமணங்கள் நடைபெறும். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி குருவாயூர் கோயிலில் 248 திருமணங்கள் நடந்தன. இதுதான் இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது. ஆனால் இன்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் குருவாயூர் கிருஷ்ணனின் சன்னதி முன் 356 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே செப்டம்பர் 8ம் தேதியான இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு முன்பதிவு செய்யத் தொடங்கினர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த மாதமே திருமண ஜோடிகளின் எண்ணிக்கை 300ஐ கடந்தது. நேற்று வரை 356 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டன.

இதனால் திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த குருவாயூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணி முதல் தான் திருமண சடங்குகள் தொடங்கும். ஆனால் இன்று அதிகாலை 4 மணி முதலே சடங்குகள் தொடங்கின. திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். கோயில் வளாகத்திற்குள் 6 மணமேடைகள் அமைக்கப்பட்டன. உடனுக்குடன் திருமணத்தை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. காலை 8 மணிக்குள் 186 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தன. ஒவ்வொரு ஜோடிக்கும் உறவினர்கள், போட்டோ, வீடியோகிராபர்கள் உள்பட 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நண்பகல் 12 மணிக்குள் அனைத்து திருமணங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. 356 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்ததால் குருவாயூர் நகரமே இன்று ஸ்தம்பித்து காணப்பட்டது. குருவாயூரில் இன்று எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர். மணமக்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குருவாயூர் முழுவதும் இன்று கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

லாட்ஜுகள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் இந்த நாளில் குருவாயூரில் வைத்து திருமணம் நடந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திருமண ஜோடிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

thirteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi