மதுரை: மதுரை, பெத்தானியாபுரம், தாமஸ் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(59). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவி, மகன்கள் உள்ளனர். இவர், பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். நேற்று காலை 6.30 மணியளவில் இவரது வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் சிந்திய நிலையில் ராஜேந்திரன் தரையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே அவர் இறந்தார். கரிமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘ராஜேந்திரன் இன்று (நேற்று) காலை துப்பாக்கியை சுத்தப்படுத்தும்போது தவறுதலாக துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தியதில், அவரது வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. எனினும் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.