10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இந்திய ஒலிம்பிக் வரலாற்று சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாறினார் இந்த துப்பாக்கி நாயகன். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது குறித்து சமீபத்தில் அபினவ் பிந்த்ரா கூறியதாவது: 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளேன். 2004 ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டி என் மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டது. நாம் எவ்வளவு வலுவுடன் போராடினாலும், திரும்ப திரும்ப முயற்சி செய்தாலும் வெற்றி என்பது நமது கைகளில் இல்லை. நமது வேலை இறுதி வரை உறுதியுடன் போராடுவது மட்டுமே. போராட்டத்தை கைவிடாமல் இருந்தால் நிச்சயம் ஒரு நாள் நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைக்கும்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரார்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் விழுவதும், வீழ்வதும் பல மடங்கு பலத்துடன் எழுவதற்காக மட்டுமே. இது தான் ஒலிம்பிக்கில் நான் கற்று கொண்டவை. இவ்வாறு அவர் கூறினார். அபினவ் பிந்த்ரா ‘எ ஷாட் அட் ஹிஸ்டரி’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் தான் எவ்வாறு தங்கம் வென்றேன், அன்றைய ஒலிம்பிக் தொடரில் தனது மனநிலை எப்படி இருந்தது, தனது வெற்றி மூலம் விளையாட்டு வீரர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பதிவு செய்துள்ளார்.