திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்தில் 67 டோல்கேட்டினை அமைத்துள்ளது. தற்போது புதியதாக மேலும் மூன்று டோல்கேட் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
தற்போது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தமிழக மக்களுக்கு டோல்கேட் கட்டண வரியை 17 சதவீதம் உயர்த்தியுள்ளது ஒன்றிய பாஜ அரசு. தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்துள்ள ஒன்றிய அரசு குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட ஏன் அமைக்கவில்லை? அண்டை மாநிலமான கேரளாவில் 5, மகாராஷ்டிராவில் 44 டோல்கேட்டுகள் உள்ளன. தனது மாநிலத்தில் டோல்கேட்டே இல்லாத நிலையில் மோடி தமிழகத்திற்கு மட்டும் ஏன் 67 டோல்கேட்கள் அமைத்துள்ளார்? இதனை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு கூறினார்.