குத்தகை ரத்து செய்ததும், காலி செய்ய அவகாசம் வழங்காமல் சீல் வைத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, கிளப் நுழைவாயில் சீல் அகற்றப்படவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர், கிளப்புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், உத்தரவாதத்தை மீறியிருந்தால் அதுசம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும், முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர்.