இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக் கூறி அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. அதேசமயம், இதுபோன்ற அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தும்போது பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். ஏதேனும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் வைப்புத்தொகையை திரும்ப பெற முடியாது என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.