கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு குப்பையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி: போலீசார் தீவிர விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே குப்பையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொருக்கந்தாங்கல் பகுதியில் ஒருவரது வீட்டின் அருகே உள்ள குப்பையில் ரிவால்வர் என்ற கை துப்பாக்கி ஒன்று இருப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த கைத் துப்பாக்கியை கைப்பற்றினர்.

அங்கு பாய், தலையணை மற்றும் ஷோபா செட் ஆகியவை சிதறிக் கிடந்தன. ஆதனூர் ஊராட்சியில் வட மாநில வாலிபர்கள், ரவுடி கும்பல் மற்றும் கஞ்சா கும்பல் மர்மமான முறையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருவதாக கூறப்படுகிறது. இதில், ஏற்கனவே ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதனுக்கு ரவுடி கும்பல் கொலை மிரட்டல் விடுத்தும், கொலை முயற்சி செய்தும் வந்தனர். இதனால், அவரது வீடு மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில், கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் பீர்க்கங்கரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், குப்பையில் கைப்பற்றிய கை துப்பாக்கியை மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் அது டம்மி துப்பாக்கி என்று தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி அல்லது கஞ்சா கும்பல்கள் துப்பாக்கியை வைத்து வழிப்பறி, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார்களா, அவர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஆதனூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை